நீதிமன்ற உத்தரவை மீறி செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பிக்குவின் சடலத்தை எரித்த பிக்குகள் அந்த நடவடிக்கையினை கைவிடவேண்டும் என வலியுறுத்திய சட்டத்தரணிகள் மற்றும் மக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் அத்துமீறி பௌத்த விகாரை அமைத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த விகாரை கடந்த சனிக்கிழமை உயிரிழந்திருந்தார்.
அவருடைய சடலத்தை அந்தப் பகுதியில் எரிக்கவோ புதைக்கவோ கூடாது என்றும் கடற்கரையில் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது.
ஆனாலும் அந்த உத்தரவையும் மீறி ஆலயச்சூழலில் சடலத்தைப் புதைக்க தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த பௌத்தபிக்குகள் முற்பட்டிருந்தனர். அவ்வேளை நீதிமன்றக் கட்டளையை பின்பற்றுமாறுகோரிய சட்டத்தரணிகளையும் மக்களையும் தள்ளி வன்முறையில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் தாம் எதிர்பார்த்த இடத்தில் சடலத்தை எரியூட்டினர்.
இந்த சம்பவங்கள் நடைபெற்றபோது பொலிஸார் தமிழ்மக்களை மட்டும் கட்டுப்படுத்தியதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.